search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதுகு வலி"

    • மும்பை - தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் விளையாடினார்
    • அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் 95 ரன்கள் எடுத்தார்

    இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்ற 2-வது தேசிய போட்டியின் போது முதுகு வலி ஏற்பட்டதாக ஷ்ரேயாஸ் ஐயர் தொடரின் மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்து விலகினார்.

    பின்னர், மும்பை - தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் விளையாடினார். அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் 95 ரன்கள் எடுத்தார்.

    அதன் பிறகு, ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் மோதின. அப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    அப்போட்டியின் 4 மற்றும் 5-ம் நாட்களில், முதுகு வலி காரணமாக ஷ்ரேயாஸ் விளையாடவில்லை. முதுகு வலி காரணமாக கடந்த ஆண்டு அவர் அறுவை சிகிக்சை செய்திருந்தார்.

    இந்நிலையில், முதுகு வலி காரணமாக வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ், முதல் சில போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • முதுகு தண்டுவட பாதிப்பு மிகக்கொடுமையானது.
    • சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் முதுகெலும்பு காயத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

    விளையாடும்போதோ, விபத்தின்போதோ முதுகெலும்பில் ஏற்படும் காயம் ஒட்டுமொத்த உடல் இயக்க செயல்பாடுகளையும் முடக்கிவிட வாய்ப்புள்ளது. 'ஸ்பைனல் கார்டு இஞ்சுரி' எனப்படும் இந்த முதுகு தண்டுவட பாதிப்பு மிகக்கொடுமையானது. சக்கர நாற்காலியில் முடங்கும் நிலைமையை ஏற்படுத்திவிடக்கூடியது.

    சமீபத்திய ஆய்வுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஐந்து லட்சம் பேர் முதுகெலும்பு தண்டுவட பாதிப்புக்கு ஆளாகிறார்கள். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, முதுகெலும்பு காயம் உள்ளவர்கள் முன்கூட்டியே இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதுகெலும்பு காயம் ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறது. பெண்களை விட ஆண்கள்தான் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

    பேரதிர்ச்சி ஏற்படுத்தும் விபத்துக்களில் சிக்கி கடும் பாதிப்புக்குள்ளாகுபவர்களில் 90 சதவீதம் பேர் முதுகு தண்டுவட பாதிப்புக்குள்ளாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சாலை விபத்துகள், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுவது, வன்முறையில் பாதிப்புக்குள்ளாவது போன்றவை இதில் அடங்கும். முதுகு தண்டுவட பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு நாள்பட்ட வலி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பலர் மனச்சோர்வுக்கும் ஆளாகிறார்கள். ஒரு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் முதுகெலும்பு காயத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

    பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது: கார் விபத்துக்கள்தான் பெரும்பாலும் முதுகு தண்டுவட காயத்திற்கு முக்கிய காரணமாகின்றன. அதனால் சீரான வேகத்தில் கார் ஓட்டுவது அவசியம். கார் ஓட்டும்போது உடன் பயணிப்பவர்களுடன் பேசுவது, எதையாவது பற்றி யோசித்துக்கொண்டிருப்பது போன்ற கவனச்சிதறல்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. கார் ஓட்டுபவரும், உடன் பயணிப்பவர்களும் சீட் பெல்ட் அணிவது மிகவும் அவசியமானது.

    தடுமாறி விழுதல்: எதிர்பாராதவிதமாக உயரமான பகுதியில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுவதும் முதுகெலும்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சைக்கிளிலோ, இருசக்கர வாகனத்திலோ செல்லும்போது தடுமாறி கீழே விழுந்து விட்டால் முதுகெலும்பில் காயம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆதலால் கவனமாக செயல்பட வேண்டும்.

    விளையாட்டு: விளையாடும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமானது. ஜிம்னாஸ்டிக் போன்ற உடலை வளைத்து சாகசம் செய்யும் விளையாட்டுகளின்போது பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. சிறு அசம்பாவிதம் நேர்ந்தாலும் அது முதுகெலும்பு பகுதியை கடுமையாக பாதித்துவிடும்.

    மதுப்பழக்கம்: மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது விபத்துக்கு மூல காரணமாகிறது. எனவே அதனை தவிர்க்க வேண்டும்.

    • 90 சதவிகித முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும்.

    முதுகு எலும்புகள், தசைகள், வட்டுகள் மற்றும் தசை நார்கள் ஆகியவற்றின் கூட்டுக் கட்டமைப்பைக் கொண்டது முதுகுத்தண்டுவடம். உடலின் சீரான இயக்கத்துக்கு உதவுவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. முதுகுத் தண்டுவட பிரச்சினைகள் பெண்களையே அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது அல்லது வேலை பார்ப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, சரியான தோரணையில் உட்காராதது, அதிக கனமான பொருட்களைத் தூக்குவது, திடீர் இயக்கம், தும்மல், இருமல், உடலை முறுக்குதல், நீண்ட நேரம் நிற்பது, இடைவெளியின்றி நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவது, கழுத்து முன்னோக்கி இருக்கும்படி உட்காருவது, தொடர் தூக்கம், செய்யும் வேலையின் தன்மை மற்றும் வாழ்க்கை முறையினால் கூட முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு வலி ஏற்படலாம். இதுதவிர தசைப்பிடிப்பு, குடலிறக்கம், தசை இறுக்கம், இடுப்பு, மூட்டு வலி, எலும்பு முறிவு அல்லது காயங்கள், தசைநார் இறுக்கம் போன்றவற்றாலும் வலி ஏற்படலாம்.

    சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போவது என சத்து குறைபாட்டாலும் முதுகுவலி உண்டாகும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் குழந்தைப்பேறின்போது ஏற்படும் ஹார்மோன் கோளாறு மற்றும் உடல் மாற்றங்களாலும் முதுகுத்தண்டில் வலி வரலாம்.

    ஷிங்கிள்' எனப்படும் வைரஸ் தொற்றினால் உண்டாகும் தோல் நோய், புற்றுநோய் கட்டிகள், முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியில் சேதம் ஏற்படுவது, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை நோய்த்தொற்று, இடுப்பு அழற்சி நோய், காய்ச்சல், முதுகெலும்பு தொற்று ஆகியவையும் முதுகுவலிக்கு காரணமாகும். எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ, ரத்தப் பரிசோதனை, நரம்பியல் சோதனைகள் மூலம் முதுகுத்தண்டு பிரச்சினையின் தீவிரத்தைக் கண்டறிய முடியும். 90 சதவிகித முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும்.

    வலியைக் குறைக்கும் சிகிச்சைகள், தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம். உடற்பயிற்சிகள், உடலின் சமநிலையைப் பராமரித்தல் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமும் முதுகுவலி வருவதை தடுக்கலாம். ஏரோபிக் பயிற்சிகள், யோகா, நீச்சல், நடைப்பயிற்சி போன்றவற்றை தினசரி செய்வது, முதுகுப் பகுதியில் உள்ள தசைகள் சிறப்பாக செயல்பட உதவும்.

    தினசரி காலை உணவைத் தவறாமல் சாப்பிட வேண்டும். இது அன்றைய நாளின் தொடக்கத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுகள் ஏற்படாமல் காக்கும். உடல் பருமன் மற்றும் அதிக எடையும் முதுகு வலிக்கான முக்கியக் காரணமாகும். எனவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

    • முதுகுவலியை ஆரம்பத்திலேயே கவனிப்பது நல்லது.
    • இயல்பான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவே, ஆரம்ப கால முதுகுவலியை விரட்டலாம்.

    ஐ.டி.துறையில் வேலை செய்யும் பலர், இருக்கையில் அதிக நேரம் அமர்ந்திருப்பதுடன் முதுகுவலியையும் உணர்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கவனிப்பது நல்லது. மேலும் இயல்பான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமாகவே, ஆரம்ப கால முதுகுவலியை விரட்டலாம். இதோ அதற்கான சில வழிகாட்டுதல்கள்...

    பால் பொருட்கள் : கால்சியம் குறைபாடு எலும்பு வலி, தசைப்பிடிப்பு, தசை வலி போன்றவற்றை ஏற்படுத்தலாம். கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உயிரணுக்களுக்கு எரிபொருளாக உதவுவதோடு, முதுகுவலிக்கு சிறந்த மருந்தாகவும் செயல்படும். எனவே பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்களை, அன்றாட உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.

    புரதம் நிறைந்த உணவு : தினை, உளுத்தம் பருப்பு, பீன்ஸ், எள் போன்றவை புரதச்சத்து, இரும்புச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை. அவை முதுகுவலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸுக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், சேதமடைந்த திசுக்களை சரிசெய்து விரைவாக குணமடைய உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் கொண்டுள்ளது.

    பழங்கள் : புளூபெர்ரி, அன்னாசி மற்றும் திராட்சை போன்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்ட பழங்கள் உங்கள் முதுகெலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஏனெனில் அவை வலி நிவாரணியாகவும், முதுகுவலியை குறைக்கவும் உதவுகின்றன. ஆனால் எல்லாவற்றையும் போலவே, அளவோடு சாப்பிடும்போது பலன் அதிகபட்சமாக இருக்கும்.

    மூலிகைகள் : இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இலவங்கப்பட்டை, துளசி போன்றவற்றிலும் உள்ளது. நாம் பொதுவாக வீட்டில் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களான மஞ்சள் போன்றவை வலியைக் குறைத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. அவற்றை மிதமாக உட்கொள்வது அவசியம்.

    பச்சை காய்கறிகள் : வைட்டமின்-சி மற்றும் பி-12 நிறைந்த சில காய்கறிகளான கத்தரிக்காய், முருங்கைக்காய், கீரை, புரோக்கோலி போன்றவற்றால் முதுகெலும்பு வலுப்பெறுகின்றன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் சேதமடைந்த செல்களை சீரமைக்கவும் உதவும்.

    • உடல் எடை கண்காணிப்பது என்பது மூட்டு வாத நோய்களுக்கு மிக அவசியம்.
    • முதுமை நோய் நாளுக்கு நாள் அதிகரித்து பல்வேறு மூட்டுகளை பாதிக்கிறது.

    மூட்டுவலியும், முதுகுவலியும் பெண்களின் ஆரோக்கியத்தினை பாதிக்கும் ஒரு அங்கமாகவே உள்ளன. பிரசவத்திற்கு பின்னர் பெண்களில் பெரும்பாலானவர்கள் முதுகு வலி அனுபவிக்காத நாட்களே இல்லை எனலாம். முதுகு வலி ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஏனெனில் மகப்பேற்றின் போது அளவில் பெரிதாகும் கருப்பையானது கீழ் முதுகு மற்றும் இடுப்பு மூட்டுகளில் ஏற்படுத்தும் அழுத்தத்தின் விளைவாக முதுகுவலி உண்டாகக்கூடும்.

    மகவை சுமக்கும் அனைத்து பெண்களும் இத்தகைய வலியினையும் சுமந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் வருத்தமான ஒன்று. இயற்கையாக ஏற்படும் இத்தகைய மாறுதல்களால் உண்டாகும் முதுகு தண்டுவட வலி ஒருபுறமிருக்க, மாறிப்போன வாழ்வியல் நெறிமுறைகளால் இது போன்ற தொந்தரவுகள் இன்னும் சற்று கூடுதலாகி, பெண்களின் வாழ்க்கைத் தரத்தை குறைத்து, ஆரோக்கியத்திற்கான பாதையைக் கடினமாக்குகிறது.

    முதுகு தண்டுவடப் பகுதியில் தண்டுவட எலும்புகளின் இடையே உள்ள சவ்வு வீக்கம், சவ்வு சரிவு போன்ற பல்வேறு நோய்நிலைகள் இன்றைய நவீன காலத்தில் பெண்களை அதிகம் தாக்கி அவர்களை துன்புறுத்துவது இயல்பாகிவிட்டது. அதுமட்டுமின்றி தண்டுவட எலும்புப் பகுதியில் ஏற்படும் கட்டிகளும் முதுகு வலிக்கு காரணமாகின்றன.

    ஆகவே பெண்கள் நாட்பட்ட முதுகு வலியில், ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று எண்ணி அலட்சியம் காட்டாமல், ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில் ஒட்டுமொத்த குடும்பத்தின் நலனுக்கும் அவர்கள் தான் ஆணி வேர். முதுகுவலி ஒருபுறமிருக்க, பெண்களுக்கு வயோதிகப் பருவத்தில் ஏற்படும் ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் எனும் கீல்வாதம் அவர்களை அதிகம் துன்புறுத்தும். இந்த மூட்டு வாத நோயை 45 வயது கடந்த பெண்கள் அனைவரும் அனுபவிக்க தயாராக வேண்டிய நிலை உள்ளது வருத்தம் தான். ஏனெனில் பெண்களில் மூன்றில் இருவருக்கு இந்த மூட்டு வாதம் ஏற்பட்டு அவர்களின் அன்றாட வாழ்வியலை பாதிக்கிறது.

    பொதுவாக இரு முழங்கால் மூட்டுகளில் உண்டாகும் இந்த முதுமை நோய் நாளுக்கு நாள் அதிகரித்து பல்வேறு மூட்டுகளை பாதிக்கிறது. மூட்டுகளில் வீக்கம், வேதனை, நடப்பதில் சிரமம், உட்கார்ந்து எழுவதில் சிரமம், கால்களை நீட்டி மடக்குவதில் சிரமம், தாங்கி தாங்கி நடத்தல் போன்ற மூட்டு வாத நோயின் பல குறிகுணங்களைக் கொண்டு பெண்கள் பலர் அன்றாட வாழ்க்கையைக் கடக்கின்றனர். பல்வேறு நோய் நிலைகள் பெண்களின் மூட்டுக்களை பாதிக்கும் தன்மையுடையதால் மருத்துவரை அணுகி நோய்நிலையைக் கணித்து சிகிச்சையை துவங்குவது நல்லது.

    சித்த மருத்துவ மூலிகைகள் பல பெண்களின் மூட்டுக்களின் வாதம் சார்ந்த அனைத்து நோய் நிலையிலும் நல்ல பலன் தருவதாக உள்ளன. தசமூலம், ஓமம், முருங்கை, முடக்கறுத்தான், மூக்கிரட்டை, பிரண்டை, மஞ்சள், இஞ்சி, ஆமணக்கு, நொச்சி, குந்திரிக்கம், அரத்தை, குறுந்தொட்டி, அமுக்கரா, நிலவேம்பு, திரிபலை,திரிகடுகு, குங்கிலியம் போன்ற மூலிகைகள் அவற்றில் சில. அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் வலி நிவாரணி மருந்துகளின் பயன்பாட்டைக் குறைக்க முடியும்.

    மூட்டுக்கள் சார்ந்த வலி நோய்களுக்கு சித்த மருத்துவம் எளிமையாக வலியுறுத்துவது முருங்கையைத் தான். நவீன உலகத்தில் எதெற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகளை நாட துவங்கி விட்டதால், முருங்கை போன்ற மருத்துவ குணமிக்க எளிய மூலிகை மருந்துகள் பல நம் நாட்டினருக்கு மறந்தே போய்விட்டது.

    முருங்கை கீரையுடன் மூட்டு வலியை குறைக்கும் மருத்துவகுணமுள்ள, இஞ்சி, பூண்டு, மிளகு, பெருங்காயம், மஞ்சள், சீரகம் இவற்றுடன் சிறிது உப்பிட்டு சூப் வைத்து அருந்தினால் மூட்டுகளுக்கு வலிமை கிடைக்கும். அடிக்கடி இதனை எடுத்து வர பெண்கள் வயோதிக பருவத்தில் கூட மூட்டு நோயில் இருந்து விடுபட்டு வீறு நடை கொள்ள முடியும்.

    சித்த மருத்துவ மருந்தான 'குந்திரிக்க தைலம்' எனும் மருந்தினை மூட்டுகளின் வீக்கத்தின் மீது தடவி வெந்நீரில் ஒத்தடமிட வீக்கம் குறைந்து நிவாரணம் தரும். பிண்ட தைலம் எனும் சித்த மருந்தையும் இதற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

    மூட்டு வலியால் அவதியுறும் பெண்கள் பாலில், மஞ்சள்பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து தொடர்ந்து எடுக்க நிச்சயம் நல்ல பலன் தரும்.

    சர்வ ரோக நிவாரணியான அமுக்கராக் கிழங்கு சேர்ந்த அமுக்கரா சூரணம் எனும் சித்த மருந்தை பாலில் கலந்து எடுப்பதன் மூலம் மூட்டு வலி, முதுகு வலி சார்ந்த நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். இதை வீக்கமான இடத்தில் முட்டை வெண்கருவுடன் சேர்த்து பற்று போட்டாலும் வீக்கம் குறைந்து வலி குறையும்.

    மூட்டு வாதத்திற்கென தனிச்சிறப்பு மிக்க கீரை முடக்கறுத்தான். முடக்கறுத்தான் கீரையில் உள்ள லுடியோலின் மற்றும் அபிஜெனின் குளுகுரோனிட் ஆகிய முக்கிய வேதிப்பொருட்கள் மூட்டு வீக்கத்தை குறைப்பதோடு, தேய்ந்த குருத்தெலும்புகளுக்கு புத்துணர்வு தந்து மீண்டும் வளர்ச்சி பெற உதவுவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. சூடு தன்மையுள்ள முடக்கறுத்தான் கீரை நோய்க்கு காரணமாகும் சித்த மருத்துவம் கூறும் வாதம்,கபம் இவற்றை குறைத்து மூட்டு வலியை குறைக்கும். அவ்வப்போது முடக்கறுத்தான் கீரையை உணவில் சேர்த்துக்கொண்டாலும், சூப் வைத்து குடித்தாலும் வாதத்தை குறைக்கும்.

    மூட்டு சார்ந்த நோய்களுக்கு வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று குற்றங்களில் வாதம் பாதிப்படைவதே முதன்மைக் காரணம் என்கிறது சித்த மருத்துவம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்வதும். அவ்வப்போது மலச்சிக்கலை போக்கிக் கொள்வதும் வாதத்தை குறைக்கும் எளிமையான வழிமுறைகள்.

    சாதாரணமாக ஏற்படும் இடுப்பு வலி, முதுகு தண்டுவட எலும்பு பகுதிகளில் வலி, மூட்டு வலி மற்றும் வீக்கங்களுக்கு நொச்சி, ஆமணக்கு இலை, எருக்கு இலை, வாதமடக்கி எனும் தழுதாழை இலை, வாத நாராயணன் இலை இவைகளில் ஒன்றை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றடமிட நல்ல பலன் தரும். அல்லது இவை சேர்ந்த சித்த மருந்துகளை பயன்படுத்தலாம். இவற்றில் உள்ள பல்வேறு வேதிப்பொருட்கள் வீக்கத்தை உண்டாக்கும் காரணிகளை தடுக்க கூடியதாக உள்ளன.

    நொச்சி இலையை குளிக்கின்ற வெந்நீரில் போட்டு குளிக்க இடுப்பு வலி, மூட்டு வலிகளை குறைக்கும். அல்லது யூகலிப்டஸ் இலைகளை போட்டு குளித்தாலும் வலி குறையும். மூட்டுகளில் சேரும் கபமாகிய குளிர்ச்சியும், வாதமாகிய வாயுவும் வலியை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுவதால் குளிர்ச்சி, வாயுவை அதிகரிக்கும் உணவு வகைகளையும், பழக்கவழக்கங்களையும் மூட்டுகளில் வாதம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    வலிகளை குறைக்க மருந்துகளை உட்கொண்டு சளைத்தவர்கள், வலியைக் குறைக்க தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் சிறிது கற்பூரம், கொஞ்சம் ஓமம் சேர்த்து காய்ச்சி பதமான சூட்டில் மேலே தடவி வர நிவாரணம் தரும். மூட்டு வீக்கங்களுக்கு சோற்றுக்கற்றாழை மடலை சூடாக்கி ஒத்தடம் இடுவது நல்லது. இயற்கையாக வீக்கமுருக்கி செய்கை தன்மையுள்ள மஞ்சளையும், கல்லுப்பையும் சேர்த்து வறுத்து துணியில் முடிந்து ஒத்தடம் இடுவதும் வீக்கம் குறைய வழிவகை ஆகும்.

    ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு வாதம், ருமட்டாய்டு எனும் முடக்கு வாதம், யூரிக் அமிலம் உப்பு படிவதால் ஏற்படும் கீல்வாதம் ஆகிய மூன்று முக்கிய வகைகளுமே பெண்களை அதிகம் பாதிப்பதாக உள்ளது. கருவில் பிள்ளையை சுமந்து உச்சக்கட்ட வலியான பிரசவ வலியை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்ளும் பெண்கள், இத்தகைய மூட்டு வலிகளை தாங்க முடியாமல் தவிப்பது ஒட்டு மொத்த குடும்பத்தையும் அவலநிலைக்கு ஆளாக்கும். நோயின் தன்மையை பிரித்தறிந்து துவக்கத்திலேயே சித்த மருத்துவத்தை நாடுவது நோயின் தீவிரத்தை குறைத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட உதவும்.

    சித்த மருத்துவத்தின் தனி சிறப்பு வெளி மருத்துவ முறைகள் 32 என்பதும் தான். சித்த மருத்துவத்தின் புற மருத்துவ முறைகளில் சிறப்பு மிக்க ஒன்று பற்று போடும் முறை. மூட்டு வலி,முதுகு தண்டுவட வலி போன்ற நோய் நிலைகளில் வீக்கத்தை குறைக்கவும், எலும்புகளை வன்மைப்படுத்தவும் ஆவாரை இலை,முருங்கை இலை, கருப்பு உளுந்து இவற்றுடன் சேர்த்து முட்டை வெண்கருவுடன் பற்று போட்டு வர சிறந்த பயன் தரும். சித்த மருத்துவம் கூறும் உள்மருந்துகளை மட்டும் பயன்படுத்துவதை விடுத்து வெளி மருந்துகளையும் பயன்படுத்தினால் ஆரோக்கியம் விரைவில் கிட்டும்.

    உடல் எடை கண்காணிப்பது என்பது மூட்டு வாத நோய்களுக்கு மிக அவசியம். அதனைக் கருத்தில் கொண்டு பெண்கள் உடல் எடையை அதிகரிக்காமல் பேணிக்காக்க வேண்டும். அத்துடன் உணவே மருந்து எனும் சித்த மருத்துவ அடிப்படையினை பின்பற்ற துவங்கினால் மூட்டு வலி மாத்திரம் அல்ல, இன்னும் பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகளையும் தடுத்து நலமான வாழ்க்கையை வாழ முடியும்.

    தொடர்புக்கு: drthillai.mdsiddha@gmail.com

    • அடிக்கடி ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிவது ஆரோக்கியமானது அல்ல.
    • இரவில் சவுகரியமாக படுக்கமுடியாமல் அடிக்கடி எழுவது முதுகுவலியை உண்டாக்கிவிடும்.

    பெண்கள் எதிர்கொள்ளும் உடல் நல பிரச்சினைகளில் முதுகுவலி தவிர்க்க முடியாத அங்கம் வகிக்கிறது. ஓய்வு எடுக்காமல் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். சில சமயங்களில் முதுகுவலி தானாகவே சரியாகிவிடும். ஆனால் அடிக்கடி முதுகுவலியால் அவதிப்பட்டால் அலட்சியம் கொள்ளக் கூடாது. மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. முதுகுவலியை தவிர்க்க மனதில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு...

    1. நீண்ட நேரம் உட்காருவதை தவிருங்கள்: அலுவலக வேலை பார்க்கும் பெண்கள் அன்றைய நாளின் பெரும்பகுதியை ஒரே நிலையில் அமர்ந்தபடியே செலவிடுகிறார்கள். அப்படி உட்கார்ந்திருப்பது முதுகு வலியை உண்டாக்கும். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு சிறிதளவு நேரமாவது எழுந்து நடமாட வேண்டும். மீண்டும் ஒரே நிலையில் அமர்வதை தவிர்க்க வேண்டும். பெரிய அளவில் உடல் அசைவு இல்லாமல் செயலற்ற தன்மையில் இருப்பது முதுகு தசைகளை பலவீனப்படுத்திவிடும்.

    2. மெத்தையை மாற்றுங்கள்: தூங்குவதற்கு சவுகரியமாக மெத்தை அமைந்திருக்க வேண்டும். கடினமாகவோ, மிகவும் மென்மையாகவோ இருக்கக்கூடாது. 10 ஆண்டுக்கு மேல் பயன்பாட்டில் இருக்கும் மெத்தையை மாற்றிவிட வேண்டும். பொதுவாக மெத்தைகள் முதுகெலும்பு பகுதி வளைந்து கொடுக்கும் வகையிலும், அதன் ஆரோக்கியத்தை பேணும் வகையிலும் வடிவமைக்கப்படுகிறது. அதன் தன்மையில் இருந்து மெத்தை மாறுபட்டால் முதுகு தண்டுவடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அதன் காரணமாக முதுகு வலி உண்டாகலாம்.

    3. நன்றாக தூங்குங்கள்: மெத்தை சமச்சீரற்ற நிலையிலோ, மேடு பள்ளமாகவோ இருந்தால் உடலுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். அது தூக்கத்தை பாதிக்கும். இரவில் சவுகரியமாக படுக்கமுடியாமல் அடிக்கடி எழுவது முதுகுவலியை உண்டாக்கிவிடும்.

    4. ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள்: உடல் எடைக்கும், முதுகுவலிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. உடல் எடையை சீராக பராமரிப்பது முதுகுவலியை தடுக்க உதவும். அதிக உடல் எடையுடன் இருப்பது முதுகெலும்பு மற்றும் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, உடல் எடையை குறைக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்.

    5. மோசமான தோரணையை தவிருங்கள்: ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காரும் பட்சத்தில் உடல் தோரணையை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏெனனில் மோசமான உடல் தோரணை காரணமாக முதுகுத்தண்டு, இடுப்பு போன்ற பகுதிகளில் அழுத்தம் ஏற்படும். நாளடைவில் அந்த பகுதியில் இருக்கும் தசைகள் தளர்வடைந்து முதுகுவலியை ஏற்படுத்தும். அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும் உடலுக்கு அசைவு கொடுங்கள். சரியான உடல் தோரணையை பராமரியுங்கள்.

    6. புகைப்பிடிப்பதை தவிருங்கள்: புகைப்பழக்கம் நுரையீரல் மற்றும் இதயத்திற்கு மட்டுமல்ல, எலும்புகளுக்கும், முதுகுத்தண்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. புகைப்பிடிப்பதால் முதுகுவலி ஏற்படலாம். ஏனெனில் உடலில் கால்சியம் உறிஞ்சுதலை குறைத்து விடும். புதிய எலும்புகளின் வளர்ச்சியை தடுத்துவிடும்.

    7. உடற்பயிற்சி செய்யுங்கள்: உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்று பவர்கள் அதனை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது தவறான உடல் அசைவை கையாள்வது முதுகு வலிக்கு வழிவகுக்கும். அதிக எடையை தூக்குவது, மோசமான தோரணையில் உடற் பயிற்சி செய்வது முதுகு வலி பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

    8. ஊட்டச்சத்துக்களின் பங்களிப்பு: கால்சியம், வைட்டமின் டி மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை தொடர்ந்து உட்கொள்ளவில்லை என்றால், முதுகுவலி அபாயம் அதிகரிக்கக் கூடும்.

    9. ஹை ஹீல்ஸ் அணிவதை தவிருங்கள்: நீண்ட நேரம் ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிவது பெண்களுக்கு முதுகு மற்றும் கால் வலியை ஏற்படுத்தும். அவை கால்கள் மற்றும் முதுகுத்தண்டு பகுதிகளில் அழுத்தத்தை தரும். ஹை ஹீல்ஸ் அணிவது நாகரிகமாக தெரியலாம். ஆனால் அடிக்கடி அணிவது ஆரோக்கியமானது அல்ல.

    10. அதிக எடையை சுமக்காதீர்கள்: தோளில் அதிக எடை கொண்ட பொருட்களை சுமப்பது தோள்பட்டை, கழுத்து மற்றும் முதுகில் வலியை ஏற்படுத்தும்.

    ×